திருவண்ணாமலை, ஜூலை 8: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று நடிகர் யோகிபாபு நடிக்கும் சினிமா படப்பிடிப்புக்கு பூஜை போடப்பட்டது. நடிகர் யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் கான்ஸ்டபிள் நந்தன் சினிமா படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. பூபாலன் நடேசன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை திருவண்ணாமலையை சேர்ந்த டி.சங்கர் என்பவர் தயாரிக்கிறார். அதில், நடிகர் ரவி மரியா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்நிலையில், கான்ஸ்டபிள் நந்தன் படப்பிடிப்புக்கான பட பூஜை நேற்று அண்ணாமலையார் கோயிலில் போடப்பட்டது. அதில், நடிகர்கள் யோகிபாபு, ரவி மரியா மற்றும் முன்னாள் நகராட்சி தலைவர் இரா.தரன், முன்னாள் கவுன்சிலர் சி.சண்முகம் மற்றும் படப்பிடிப்பு குழுவினர் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இதன் படபிடிப்பு விரைவில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.