தர்மபுரி: தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லாததால், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேமுதிக தொண்டர்கள் வாக்களிக்காமல் புறக்கணிப்பார்கள் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பிக்கிலி, புதுக்கரும்பு உள்ளிட்ட இடங்களில் நேற்று தேமுதிக கட்சி கொடியேற்றுதல், கட்சி தொண்டர்களுடன் கலந்துரையாடல் மற்றும் கட்சி நிர்வாகிகள் இல்லத்திருமண விழாவில் கலந்துகொண்ட தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தர்மபுரியில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும். இதனால் உயிரிழப்புகள் ஏற்படாது. விவசாயிகளுக்கும் வருவாய் கிடைக்கும்.
தமிழகத்தில் சட்டம்,ஒழுங்கை முதல்வர் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தேமுதிக தொண்டர்கள் புறக்கணிக்கப் போகிறோம். அதாவது இடைத்தேர்தலில் வாக்களிக்கமாட்டோம் என்பதுதான் பொருள். தமிழகத்தில் அனைத்து தேர்தலிலும் தேமுதிக போட்டியிட்டது. தேர்தலில் முறைகேடு செய்பவர்கள் மீது ஏன் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் தேர்தல் ஆணையத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அதனால் நாங்கள் போட்டியிடவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.