கோவை: எடப்பாடி பழனிசாமி கிளைச்செயலாளர் போல் செயல்படுகிறார் எனவும், அதிமுக தலைமைக்கு தகுதியற்றவர் எனவும் முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுகவை ஒன்றிணைக்க ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான புகழேந்தி, ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் எந்த அணியையும் சாராத கே.சி.பழனிசாமி ஆகியோர் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் கோவை விமான நிலையத்தில் கடந்த 13ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி நிருபர்களிடம் பேசியபோது, தன்னைக் குறித்தும், ஒருங்கிணைப்புக்குழு குறித்தும் அவதூறான கருத்துகளை தெரிவித்ததாக எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி, கோவை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு கோவை ஜேஎம் 1-ல் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். நீதிமன்ற வளாகத்தில் கே.சி.பழனிசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அதிமுகவை வெற்றி பெற வைக்க நினைக்கும் ஒவ்வொருவரையும் அரவணைப்பது தான் கட்சிக்கு நல்லது. உடல்நிலை கருதிதான் ஜானகி அம்மா ஒதுங்கி கொண்டார். பிரிந்து சென்றவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்தார். அதை ஜெயலலிதா ஏற்றுக்கொண்டார். ஆனால், எடப்பாடி இன்னும் கிளைச்செயலாளர் அளவிலே செயல்படுகிறார். யாரையும் அரவணைக்கும் எண்ணம் அவருக்கு இல்லை. என்ன பேசுவது என்று தெரியாமல், அரசியல் அறியாமையில் பேசுகிறார். அதிமுக தலைமைக்கு அவர் தகுதியற்றவர். ஒருங்கிணைப்பு குழு சார்பாக முதல்கட்டமாக சசிகலாவை சந்திக்க இருக்கிறோம். கட்சி எடப்பாடியின் தந்தை சொத்து அல்ல. அதிமுகவின் 1.5 கோடி தொண்டர்களின் சொத்து. இவ்வாறு கே.சி.பழனிசாமி கூறினார்.