அரக்கோணம்: அரக்கோணம் அருகே வேளாண் இணை இயக்குநரின் ஜீப்பில் ரூ.1.26 லட்சத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். ராணிப்பேட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) தபேந்திரன் மற்றும் ஊழியர்கள் நேற்று அரக்கோணம் பகுதியில் வீட்டுமனைப் பிரிவுகளாக மாற்றுவதற்கு தடையில்லா சான்றுகள் கேட்ட நிலங்களை ஆய்வு செய்தனர். அப்போது, அவர்களை திடீரென மடக்கிய, மாவட்ட ஆய்வு குழு துணை அலுவலர் பூமா, ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை குழுவினர் தடையில்லா சான்று வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் தொடர்பாக விசாரணை நடத்தினர்.
மேலும் அவர்கள் வந்த ஜீப்பையும் சோதனை செய்தனர். அதில் இருந்த ரூ.1.26 லட்சத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இணை இயக்குநர் தபேந்திரனிடம் இருந்த ரொக்கப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. ஜீப்பில் இந்த பணம் எப்படி வந்தது? வீட்டுமனை பிரிவு (லேஅவுட்) அமைப்பதற்கு தடையில்லா சான்று வழங்குவதற்காக பெறப்பட்ட லஞ்சப் பணமா? என்று இணை இயக்குநர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.