சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மறைவிற்கு சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்; சென்னை பெரம்பூரில் வசிக்கும், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் தனது குடியிருப்புக்கு அருகே சிலருடன் பேசிக் கொண்டிருக்கையில், இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட மர்ம நபர்கள், அவரை அரிவாளால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் பேரதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது.
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில், மாலை 07.30 மணியளவில் பொதுவெளியில், தேசிய இயக்கத்தின், மாநில தலைவர் பொறுப்பில் உள்ளவர்க்கு ஏற்பட்ட இந்த நிலை மக்களை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும். சமூகத்தில் கொலைச்சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது சட்டம், ஒழுங்கை சீர்குலைப்பதற்கு சமம். காவல்துறை உடனடியாக கொலையாளிகளை கண்டறிந்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும், உற்றார், உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.