சென்னை: மை வி3 ஆட்ஸ் செயலியில் வீடியோ பார்த்தால் 5 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரும் என கூறி வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்ததாக கோவை சைபர் க்ரைம் போலீசாருக்கு புகார் வந்தது. இந்த புகார், சென்னை பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், செயலி நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தன் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், சென்னை நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சரணடையுமாறு உத்தரவிட்டிருந்தது.
இதன்படி, சக்தி ஆனந்தன், சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன்பு நேற்று சரணடைந்தார். அவரை 19ம்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையில், ஜாமீன் கோரி சக்தி ஆனந்தன் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீதான விசாரணையை வரும் 9ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.