பாட்னா: பலவீனமாக உள்ள பாஜ அரசு வரும் ஆகஸ்ட் மாதம் கவிழும் என பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார். பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி நிறுவன நாள் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பேசிய லாலுபிரசாத்யாதவ், “ஒன்றியத்தில் இருமாநில கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ள மோடி அரசு மிகவும் பலவீனமாக உள்ளது. அதனால் ஆகஸ்ட் மாதம் மோடி அரசு கவிழும். பீகார் பேரவையில் தனிப்பெரும் கட்சியாக உள்ள ஆர்ஜேடி தன் சித்தாந்தங்களில் எந்த சமரசத்தையும் செய்து கொள்ளவில்லை” என்று கூறினார்.
* என்னை கைது செய்யுங்கள் – தேஜஸ்வி ஆவேசம்
லாலு பிரசாத் யாதவின் மகனும், பீகாரின் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் , “பாஜ தலைமையிலான இரட்டை என்ஜின் ஆட்சியில் ஒரு என்ஜின் ஊழலை இயக்குகிறது. மற்றொன்று குற்றங்களை ஊக்குவிக்கிறது. ஆனால் நீட் வினாத்தாள் கசிவு, தொடர் பால விபத்துகள், பீகாரில் நடக்கும் கொலை குற்றங்களுக்கு நிதிஷ் அரசு என் மீது வீண் பழி சுமத்துகிறது. அவர்களிடம் ஆதாரங்கள் இருந்தால் என்னை கைது செய்யட்டும்” என தெரிவித்தார்.