ராமநாதபுரம்: கடந்த மார்ச் மாதம் ராமேஸ்வரம், காரைக்கால் பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற 3 விசைப்படகுகளை கைப்பற்றி, அதிலிலிருந்த மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்தனர். இதில், விசைப்படகுகளின் ஓட்டுநர்களாகிய அந்தோணி லோபஸ் (ராமேஸ்வரம்), முருகானந்தம் (காரைக்கால்), அன்புராஜ் (காரைக்கால்) ஆகிய மூவருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு, மற்ற மீனவர்களை விடுதலை செய்து உத்தரவிடப்பட்டது. இந்த மூவரின் சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி யாழ்ப்பாணம் உயர்நீதிமன்றத்தில் இந்திய துணை தூதரகம் மூலம் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு யாழ்ப்பாணம் உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது 3 பேரையும் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.