பாட்னா: பீகார் மாநிலத்தில் கடந்த ஜனவரியில் முதல்வர் நிதிஷ்குமார் ராஷ்ட்ரிய ஜனதா தளம் உடனான தனது உறவை முறித்துக்கொண்டு பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்பினார். மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் ராஷ்ட்ரிய ஜனதா தள அமைச்சர்களிடம் இருந்த துறைகள் எடுத்த முடிவுகளை மறுஆய்வு செய்வதற்கு உத்தரவிடப்பட்டது. இந்த ஆய்வின் அடிப்படையில் முந்தைய மகாகத்பந்தன் ஆட்சியின்போது கிராமப்புற குடிநீர் விநியோக பணிகளுக்காக விடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பொது சுகாதார பொறியியல் துறை அமைச்சர் நிரஜ்குமார் சிங் கூறுகையில், ‘‘மகாகத்பந்தன் ஆட்சியின்போது வழங்கப்பட்ட கிராமப்புற நீர் வழங்கல் அமைப்பு தொடர்பான ரூ.3600 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட ஒப்பந்தங்கள் விரைவில் வெளியிடப்படும்” என்றார்.