– சத்தியநாராயணன், அயன்புரம்.
பொதுவாக இந்தக் காலத்தில் பணம் தான் பலமாக இருக்கிறது. பணத்தைத்தான் பலமாக நினைக்கவும் செய்கிறார்கள். ஆனால் அது உண்மையான பலம் அல்ல. அதில் ஊடுருவிய ஒரு அச்சம் இருக்கும். ஆனால் உண்மையான சாது சன்யாசிகளால் பணத்தின் கவர்ச்சியையும் பலத்தையும் எதிர்த்திருக்க முடியும் அப்படி நின்றும் இருக்கிறார்கள்
நாடாளும் மன்னன் ஒரு துறவியிடம்
கேட்டான்.
‘‘உங்களுக்கு என்ன வேண்டும்?
சொல்லுங்கள் தருகிறேன்’’.
துறவி சிரித்துக்கொண்டே கேட்டார்.
‘‘உனக்கு என்ன வேண்டும்? எதற்காக வந்திருக்கிறாய்?’’
பணத்தின் பலம் தோற்ற இடம் இதுதான்.
நல்ல தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்.?
– அருண், சென்னை.
துக்கம் இல்லாவிட்டால் தூக்கம் வரும். துக்கம் எதனால் வரும்? கவலைகளினால் வரும். ஆனால் யோசித்துப் பாருங்கள். பல கவலைகள் காரணமற்றவை. சில கவலைகள் வருவதற்கு நாமே காரணம். நடந்ததைப் பற்றிய கவலையை விட்டுவிட்டு நடக்கப் போவதில் உற்சாகமும் மகிழ்ச்சியும் கொள்ளுங்கள். நல்ல தூக்கம் வரும்.
சென்றதினி மீளாது,மூடரே!
நீர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும்
குழியில் வீழ்ந்து குமையாதீர்!
சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா.
என்ற மஹாகவியின் வாக்கை மனதில் கொள்ளுங்கள்.
புதிய சிந்தனைகள் வரும். உடல் உற்சாகம் பெறும். செயல் வெற்றி பெறும்.
தர்மம், சட்டம் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
– சரண்யா, பெங்களூர்.
தர்மமாக உள்ளதெல்லாம் சட்டமாக இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. காரணம் சட்டத்தை நாம் தான் இயற்றுகின்றோம். தேவைப்பட்டால் நமக்கு ஏற்றதுபோல் மாற்றிக் கொள்கிறோம். ஆனால் தர்மம் என்பது என்றைக்கும் மாறாது. உதாரணமாக, ஒருவர் தன்னுடைய மகனை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு சிகிச்சைக்காக அவசரமாக உங்களிடம் ஆயிரம் ரூபாய் கேட்கிறார் உங்களிடம் நிறைய பணம் இருக்கிறது ஆனால் நீங்கள் ஏதோ காரணத்தினால் மறுத்துவிடுகின்றீர்கள். பணம் கிடைக்காத அவர் வருத்தத்தோடு போகிறார். சரியான நேரத்தில் பணம் கிடைத்து மருந்து வாங்க முடியாததால் அவருடைய மகன் இறந்துவிடுகின்றான். இப்பொழுது ‘‘நீ ஏன் பணம் தரவில்லை?’’ என்று அவர் சட்டத்தின் முன் உங்களை நிறுத்த முடியாது. காரணம் பணம் தர வேண்டும் என்று சட்டம் கிடையாது. ஆனால் நிறைய பணம் வைத்துக்கொண்டு ஆபத்தில் நீங்கள் உதவவில்லை அல்லவா! எனவே தர்மப்படி அந்த பாவம்உங்களைச் சேரத்தானே செய்யும். அது ஏதாவது ஒரு ரூபத்தில் உங்கள் வாழ்க்கையில் எதிரொலிக்கத் தானே செய்யும்.
இன்றைய குழந்தைகளுக்கு எது முக்கிய தேவை?
– ஜெயச்சந்திரன், சேலம். ஒழுக்கம், வைராக்கியம், எதையும் எதிர்கொள்ளும் திறன் இவைகள்
எல்லாம் இன்றைய குழந்தைகளுக்கு மிக முக்கியமாகச் சொல்லித் தர வேண்டும். இன்றைக்கு ஒரு குழந்தை வளர்ப்பதற்கு ஏராளமான பணம் தேவைப்படுகிறது என்பதை ஒவ்வொரு பெற்றோரும் உணர்ந்து இருக்கிறார்கள். அதற்காக அவர்கள் ஓடி ஓடி உழைக்கிறார்கள். சேர்த்து வைத்த பணத்தை குழந்தையின் கல்விக்கும் மற்ற தேவைகளுக்கும் செலவிடுகிறார்கள். ஆனால் குழந்தைக்கு அவர்கள் தங்களுடைய நேரத்தை கொடுப்பதில்லை. குழந்தைகளுக்கு பணத்தை செலவிடுவதை விட நேரத்தைச் செலவிட்டு அவர்களை ஒழுக்கத்தோடு வளர்ப்பது மிக முக்கியம். அவர்களுக்கு மட்டுமல்ல. நாட்டுக்கும்.
அருள்ஜோதி