தானே: 1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அபு சலீம் 2005ம் ஆண்டு போர்ச்சுக்கலில் இருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டார். இந்த வழக்கில் கடந்த 2017ம் ஆண்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து நவி மும்பையில் உள்ள தலோஜா சிறையில் அபு சலீம் அடைக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில் தலோஜா சிறையில் உள்ள உயர்பாதுகாப்பு அறை சிதிலமடைந்து இருப்பதால் அதனை பழுதுபார்ப்பதற்காக அபு சலேமை நாசிக்கில் உள்ள மத்திய சிறைக்கு மாற்றுவதற்கு சிறை அதிகாரிகள் சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியை பெற்றனர். இதை எதிர்த்து அபு சலீம் தாக்கல் செய்த மனு மும்பை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனிடையே நேற்று காலை அபு சலீம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தலோஜா சிறையில் இருந்து மாற்றப்பட்டார். அவர் வேனில் நாசிக் மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.