புதுடெல்லி: சட்டீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது கடந்த 2019ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்து ரூ.2161கோடிக்கு மேல் மோசடி நடந்துள்ளதாக அம்மாநில போலீஸ் வழக்கு பதிவு செய்தது. இதனை தொடர்ந்து மதுபான ஆலை உரிமையாளர்களான அரவிந்த் சிங் மற்றும் திரிலோக் சிங் தில்லான் ஆகிய இரண்டு பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மாநில பொருளாதார குற்றப்பிரிவு வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகளும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பணமோசடி விசாரணை தொடர்பாக மதுபான ஆலை உரிமையாளர்கள் இருவரையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். ராய்ப்பூரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அரவிந்த் சிங் மற்றும் திரிலோக் சிங் தில்லான் ஆகியோரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.