திருப்போரூர்: திருப்போரூர் கிரிவலப்பாதை பகுதியில் வசித்து வருபவர் ஷேக் முகமது. இவருடைய மகன் ரியாஸ்கான் (19). இவர் படூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். மேலும், இவர் தன்னுடன் படிக்கும் நண்பர் ஒருவரின் அக்காவை கடந்த 6 மாதமாக ஒருதலையாக காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பெண் தனது காதலை ஏற்காததால் ரியாஸ்கான் கடும் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று அதிகாலை 3 மணியளவில் படுக்கை அறையில் உள்ள சீலிங் பேனில் புடவையால் தூக்கிட்டு ரியாஸ்கான் தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருப்போரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.