திருப்போரூர்: திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி தனது சட்டமன்ற தொகுதியில் உள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் தங்கி, மக்களின் குறைகளை கேட்டு தீர்வு அளிக்கும் குறைகேட்போம், குறை களைவோம் என்ற நிகழ்ச்சியை நடத்தினார். இந்த நிகழ்ச்சியின்போது அருங்குன்றம் மற்றும் திருநிலை கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் தங்கள் பகுதிக்கு இயக்கப்படும் தடம் எண்.டி.31 என்ற நகரப்பேருந்து பள்ளி முடிவடையும் நேரத்தில் இயக்கப்படாமல் வேறு நேரத்தில் இயக்கப்படுகிறது. இதனால் வீட்டுக்கு நடந்தும் ஆட்டோவிலும் செல்ல வரவேண்டிய நிலையுள்ளது. இந்த பேருந்தை திருப்போரூர் வரை நீட்டித்து பள்ளி முடியும் நேரத்தில் இயக்கவேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதை ஏற்றுக்கொண்ட எம்எல்ஏ எஸ்.எஸ். பாலாஜி, போக்குவரத்துக்கழக அதிகாரிகளுடன் பேசி (தடம் எண் டி.31) நகர பேருந்தை திருக்கழுக்குன்றத்தில் இருந்து திருப்போரூர் வரை நீட்டித்தும், பள்ளி முடியும் நேரத்தில் இயக்கவும் கேட்டுக்கொண்டார். அதன்படி அருங்குன்றம், திருநிலை, மானாம்பதி வழியாக இயக்கப்பட்டு வந்த நகர பேருந்து திருப்போரூர் வரை நீட்டிக்கப்பட்டு பள்ளி முடியும் நேரத்தில் நேற்று முதல் இயக்கப்பட்டு வருகிறது. இதற்காக சட்டமன்ற உறுப்பினர் பாலாஜிக்கு அப்பகுதி மாணவர்களும் பொதுமக்களும் நன்றி தெரிவித்துள்ளனர். நிகழ்ச்சியில், போக்குவரத்து துறை செங்கல்பட்டு மண்டல மேலாளர் தியாகராஜன், செங்கல்பட்டு கிளை மேலாளர் சீனிவாசன், அருங்குன்றம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பரசு, சிறுதாவூர் ஊராட்சி மன்ற தலைவர் வேதா அருள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.