சென்னை: சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த பரங்கி மலை மெட்ரோ ரயில் நிலையத்தையும், பூந்தமல்லி ரயில் நிலையத்தையும் இணைக்கக்கூடிய முனைப்பு மையமாக மாற்றப்பட்டு வருகிறது. இதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பரங்கி மலை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக சிறப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மோப்ப நாயுடன் சென்ற சிறப்புப்படை போலீசார் பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் சுமார் 1 மணி நேரமாக சோதனையில் ஈடுபட்டனர். முழுவதுமாக சோதனை செய்ததில் வெடிகுண்டு ஏதும் இல்லை புரளி என தெரியவந்தது. மேலும் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் போலீசார் தீவிர சோதனை நடத்த வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்றைய தினம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் அது புரளி என்பது தெரியவந்தது.