புதுடெல்லி: அனைத்து அரசு துறைகள், பொதுத்துறை வங்கிகள் மற்றும் காப்பீடு நிறுவனங்கள் ஊழல் புகார் குறித்த விசாரணை அறிக்கையை ஆன்லைனில் அனுப்பி வைக்க வேண்டும் என்று ஊழல் கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் போர்ட்டலான புகார் மேலாண்மை அமைப்பில் பல்வேறு ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட புகார்கள் பாதுகாத்து வைக்கப்படுகின்றது. பின்னர் விசாரணைக்காக சம்பந்தப்பட்ட தலைமை விஜிலென்ஸ் அதிகாரிக்கு அனுப்பப்பட்டு அவசியம் ஏற்பட்டால் போர்ட்டல் மூலமாக அறிக்கை சமர்பிக்கப்படும்.
இந்நிலையில் ஊழல் கண்காணிப்பு ஆணையம் வெளியிட்டுள்ள உத்தரவில், ‘‘அனைத்து அரசு துறைகள், பொதுத்துறை வங்கிகள் மற்றும் காப்பீடு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு அளிக்கப்படும் ஊழல் புகார்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை ஆன்லைனில் அனுப்பி வைக்க வேண்டும்.ஊழல் கண்காணிப்பு அதிகாரியால் முறையாக கையெழுத்திடப்பட்ட அறிக்கையின் பிடிஎப் பதிப்பு புகார் மேலாண்மை அமைப்பில் பதிவேற்றம் செய்யப்படலாம்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.