தேனி: தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் ஒரு தனியார் ரிசார்ட்டில் கடந்த மே 4ம் தேதி தங்கியிருந்த யூடியூபர் சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அப்போது, அவரது காரை சோதனையிட்ட போது, அதில் 409 கிராம் கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, சங்கர் உடனிருந்த ராம்பிரபு மற்றும் ராஜரத்தினம் ஆகிய இருவரையும் பழனிசெட்டிபட்டி போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை போதைபொருள் தடுப்புக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இவ்வழக்கில் தொடர்புடைய யூடியூபர் சங்கர் மற்றும் இவ்வழக்கு சம்பந்தமாக கைது செய்யப்பட்டவர்களை பழனிசெட்டிபட்டி போலீசார் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்திய பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்நிலையில், நேற்று இவ்வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை ஆன்லைன் மூலம் மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்தனர்.