புதுடெல்லி: நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் முக்கிய குற்றவாளி அமன் சிங்கை ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து சிபிஐ கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். நீட் யுஜி தேர்வு கடந்த மே 5ம் தேதி நடந்தது. இதில் 23 லட்சம் மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர். இதில் பல இடங்களில் முறைகேடு நடந்து இருப்பதும், வினாத்தாள் வெளியாகி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிபிஐ 6 வழக்குகள் பதிவு செய்துள்ளது. பீகார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், குஜராத்தில் இருந்து பலரை சிபிஐ கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஜார்க்கண்ட் ஹசாரிபாக்கை தளமாகக் கொண்ட ஒயாசிஸ் பள்ளியின் முதல்வர் மற்றும் துணை முதல்வர் மற்றும் நீட் தேர்வர்களுக்கு பாதுகாப்பான இடங்களை வழங்கியதாகக் கூறப்படும் 2 பேரை சிபிஐ கைது செய்தது. அங்கு எரிந்த வினாத்தாள்கள் பீகார் காவல்துறையினரால் மீட்கப்பட்டன. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் பகுதியை சேர்ந்த அமன்சிங் என்பரை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்துள்ளனர். அவனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.