சென்னை: மதுரை மற்றும் கோயம்புத்தூர் திட்டங்களுக்கு நிதியுதவி செய்வதில் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி விருப்பம் தெரிவித்ததுடன், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் குழுவுடன் இணைந்து மதுரையில் நேற்று, முதற்கட்ட ஆய்வை மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து இன்று கோயம்புத்தூரிலும் பார்வையிட உள்ளது. சர்வதேச நிதியுதவி கோரி, தமிழ்நாடு அரசு ஏற்கனவே இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஒன்றிய அரசுக்கு திட்ட பரிந்துரைகளை அனுப்பியுள்ளது என மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் அர்ச்சுனன், ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உயர் முதலீட்டு அலுவலர் வென்யு-கு, தலைமை பொது மேலாளர் ரேகா பிரகாஷ் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.