சென்னை: மாநிலம் முழுவதும் பழுதடைந்த சாலைகளை சரிசெய்ய வேண்டும் என தமாக தலைவர் ஜி.கே வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மாநிலத்தில் பல மாவட்டப் பகுதிகளில் சாலைகள் பழுதடைந்துள்ளதால் போக்குவரத்தில் சிரமம் ஏற்படுவதோடு, விபத்துகளும் ஏற்படுகின்றன. 100 பேர், 500 பேர், 1,000 பேர், 5,000 பேர் என எத்தனை பேர் வசிக்கும் ஊராக இருந்தாலும் அனைத்துப் பகுதிகளுக்கும் சாலை வசதி செய்து தரப்பட வேண்டும். இன்னும் பல ஊர்களுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் குறை கூறுகின்றனர். எனவே தமிழக அரசு மாநிலம் முழுவதும் சாலைகளை செப்பனிடவும், புதிய சாலைகள் அமைப்பதற்கும், தரமான அரசுப்பேருந்தை இயக்குவதற்கும் காலம் தாழ்த்தாமல் துரிதமாக செயல்பட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.