டெல்லி: 60 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் கடந்த 2020ம் ஆண்டு தொடங்கப்பட்ட கூ செயலி பல நிறுவனங்களுடனான இணைப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து தனது சேவைகளை நிறுத்த போவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக கூ செயலியின் நிறுவனர்கள் அபர்மேயா ராதாகிருஷ்ணா மற்றும் மயங்க் பிடாவட்கா தெரிவித்துள்ளதாவது;
“மிகப்பெரும் இணையதள, தொழில்நுட்ப மற்றும் ஊடக தளங்களுடன் இணைப்புக்கான பேச்சுவார்த்தை மேற்கொண்டோம். இதன் விளைவு நாங்கள் எதிர்பார்த்தது போல இல்லை. மக்கள் உருவாக்கும் உள்ளடக்கங்கள் மற்றும் சமூக வலைத்தளத்தின் இயல்பான கூறுகள் அவர்களுக்கு உவப்பானதாக இல்லை.
சிலர் முன்னுரிமையை மாற்றி ஒப்பந்தத்தின் இறுதி வரை வந்தபோதும் ஒப்பந்தம் எட்டப்படவில்லை” என தெரிவித்துள்ளனர். மேலும் 21 லட்சம் தினசரி உபயோகிப்பாளர்கள் தங்களுக்கு இருந்ததாகவும், மாதந்தோறும் 1 கோடிக்கு அதிகமானோர் கூ செயலியை பயன்படுத்தியதாகவும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.