சென்னை: கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தில் 8.6 முதல் 29.7 சதவீதம் மெத்தனால் கலக்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு அறிக்கை அளித்துள்ளது. உரிய முறையில் விசாரணை நடைபெற்றுவருவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் மாவட்ட ஆட்சியர் கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு நேரில் சென்று நடவடிக்கை எடுத்தார். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சம்பவம் தொடர்பாக வருவாய்த்துறையினர் உடனடியாக விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவிட்டார். பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்குள் உரிய சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.