சென்னை: தமிழகத்தில் 6 பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 665 எழுத்தர் பணியிடங்களுக்கு ஜூலை 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பேங்க் ஆப் இந்தியா உள்பட 6 வங்கிகளில் மொத்தம் 665 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதில் பொது பிரிவினருக்கு 285 இடங்களும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 57 இடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 177 இடங்களும், பழங்குடியினருக்கு 3 இடங்களும், பட்டியலின பிரிவினருக்கு 143 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
1996 ஜூலை 2ம் தேதிக்கு பிறகு பிறந்தவர்களும் 2004 ஜூலை 1ம் தேதிக்கு முன் பிறந்தவர்கள் மட்டுமே இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு கட்டணமாக பழங்குடியின, பட்டியலின பிரிவினருக்கு ரூ.175ம், மற்றவர்களுக்கு ரூ.850ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளுக்கு www.ipbs.in என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஜூலை 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணத்தையும் ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும்.