அண்ணாநகர்: சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் புஷ்பாந்திரா. பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர், ராஜஸ்தான் மாநிலத்தில் வசிக்கும் தந்தையின் மருத்துவ செலவிற்கு பணம் அனுப்புவதற்காக நேற்று முன்தினம் அண்ணாநகர் 5வது நிழற்சாலையில் உள்ள தனியார் வங்கிக்கு சென்றார். அங்கு, ரூ.5 லட்சத்தை வங்கி ஊழியரிடம் வழங்கினார். அதனை சரிபார்த்த ஊழியர், அந்த பணத்தில் கள்ளநோட்டுகள் இருப்பதாக வங்கி மேலாளரிடம் தெரிவித்தார். இதையடுத்து, வங்கியின் மேலாளர் பணத்தை மீண்டும் சோதனை செய்தார். அதில், 500 ரூபாய் கட்டில் 6 கள்ள நோட்டுகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கள்ள நோட்டுகள் குறித்து அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து கள்ள நோட்டுகள் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.