புதுடெல்லி: ஒன்றிய அரசு விசாரண அமைப்புக்களை தவறாக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ராகுல்காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றத்தில் நேற்று இந்தியா கூட்டணி எம்பிக்கள் ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்கட்சி தலைவரான ராகுல்காந்தி தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மற்றும் ஆம் ஆத்மியின் எம்பிக்கள் கலந்து கொண்டனர். எதிர்கட்சிகளை அமைதியாக்குவதற்காக விசாரணை அமைப்புக்களை தவறாக பயன்படுத்துவதை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட எம்பிக்கள் முழக்கமிட்டனர்.
மேலும் பாஜவில் இணையுங்கள், ஊழலுக்கான உரிமத்தை பெறுங்கள், விசாரணை அமைப்புக்களை தவறாக பயன்படுத்துவதை நிறுத்துங்கள் என எழுதப்பட்ட பதாகைகளை அவர்கள் வைத்திருந்தனர். போராட்டத்தில் பங்கேற்ற ஆம் ஆத்மி எம்பி ராகவ் சதா, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சிறைக்கு பின்னால் நிற்கும் போஸ்டரை வைத்திருந்தார். மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்ட 3 அமைச்சர்களை விடுவிக்க வேண்டும், ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் மற்றும் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு எதிராக அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்றும் போராட்டத்தில் பங்கேற்ற எம்பிக்கள் முழக்கமிட்டனர்.