திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரத்தில் 4 பள்ளி மாணவர்களுக்கு ஷிகெல்லா நோய் பரவியது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கெட்டுப்போன உணவு மற்றும் அசுத்தமான தண்ணீரை குடிப்பதன் மூலம் ஷிகெல்லா பாக்டீரியா உடலுக்குள் வருகிறது. கடுமையான வயிற்றுப்போக்கு தான் இந்த நோயின் முக்கிய அறிகுறியாகும். உடனே சிகிச்சை அளிக்காவிட்டால் மரணம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. கேரளாவில் கடந்த சில வருடங்களாக கோழிக்கோடு, மலப்புரம் உள்பட சில மாவட்டங்களில் இந்த நோய் பரவல் அதிக அளவில் காணப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மலப்புரம் அருகே கோழிப்புரம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் 147 மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக அங்குள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களை பரிசோதித்ததில் 4 மாணவர்களுக்கு ஷிகெல்லா நோய் பரவி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற மாணவர்களுக்கும் ஷிகெல்லா நோய் பரவியுள்ளதா? என்பதை கண்டுபிடிக்க பரிசோதனைகள் நடக்கிறது.