சென்னை: கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் தொடர்பாக ஐகோர்ட் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து வழக்கு தொடந்துள்ளது. தலைமைச் செயலாளர், டிஜிபி மற்றும் சேலம், கள்ளக்குறிச்சி ஆட்சியர்கள் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். கள்ளக்குறிச்சியில் ஜூன் 18ம் தேதி கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதையடுத்து மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் விற்பனை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த 21 பேரை சிபிசிஐடி போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சியை ஒட்டியுள்ள கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு, அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. கல்வராயன் மலை பகுதி மக்களின் பொருளாதார சமூக மேம்பாட்டுக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தாமாக முன் வந்து இந்த வழக்கை வழக்கு விசாரணைக்கு எடுத்துள்ளது. தலைமைச் செயலாளர், மத்திய, மாநில பழங்குடியினர் நலத்துறை, டிஜிபி எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து டிஜிபி மற்றும் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.