லண்டன்: இந்து மதத்தின் மீது தனக்கு தீவிர நம்பிக்கை உண்டு என்றும் மத நம்பிக்கைகளில் இருந்து தான் உத்வேகமும் ஆறுதலும் கிடைக்கிறது என்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்தார். இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமராக உள்ளார். வரும் 4ம் தேதி அந்த நாட்டில் பொது தேர்தல் நடக்கிறது.தேர்தலில் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் தொழிலாளர் கட்சிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், லண்டனில் உள்ள ஸ்ரீசுவாமி நாராயண் கோயிலுக்கு ரிஷி சுனக்கும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி ஆகியோர் நேற்று முன்தினம் சென்று வழிபட்டனர். கோயிலை சுற்றி பார்த்த பின்னர் அங்கிருந்த தன்னார்வலர்கள்,மூத்த தலைவர்களுடன் கலந்துரையாடினார்.பின்னர் அவர் பேசுகையில்,‘‘டி-20 உலக கிரிக்கெட் போட்டியில் இந்தியா கோப்பையை கைப்பற்றியுள்ளது.உங்களை போலவே நானும் ஒரு இந்து. மத நம்பிக்கையில் இருந்து உத்வேகத்தையும் ஆறுதலையும் பெறுகிறேன்.
பகவத் கீதை நுாலை வைத்து நாடாளுமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் எடுத்து கொண்டதில் பெருமிதம் கொள்கிறேன். கடமை செய்,பலனை எதிர்பாராதே என பகவத் கீதை கூறுகிறது. நமது கடமையை ஒருவர் உண்மையாக செய்யும் வரை அதன் விளைவை பற்றி கவலைப்படாமல் செய்வதற்கு நம்பிக்கை கற்று கொடுக்கிறது. அதை சொல்லிதான் என் பெற்றோர் என்னை வளர்த்தனர். அப்படித்தான் நானும் வாழ்கிறேன். என் மகள்கள் வளரும்போது அதைத்தான் நான் அவர்களுக்கு சொல்லி கொடுக்க விரும்புகிறேன். பொது சேவைக்கான எனது அணுகுமுறையில் தர்மம்தான் எனக்கு வழிகாட்டுகிறது,’’ என்றார்.