சென்னை: டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்றதை கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரையில் 50 அடி ஆழ்கடலில் தேசியக் கொடியேற்றி கொண்டாடினர். சென்னை மற்றும் புதுச்சேரியில் டெம்பிள் அட்வென்ச்சர் என்ற பெயரில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி மையம் நடத்தி வருபவர் அரவிந்த் தருண் ஸ்ரீ. தற்போது காரப்பாக்கத்தில் வசித்து வரும் இவர் கடலில் தூய்மை பணிகள், கடலில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுதல் உள்ளிட்ட சமுதாய பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் இந்திய நிகழ்வுகள் எதுவாக இருந்தாலும் தேசப்பற்றோடு தேசியக்கொடி ஏந்தி ஆழ்கடலில் அதனை கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதை கொண்டாடும் வகையிலும், இந்திய அணியை பாராட்டும் வகையிலும் உலகக்கோப்பை போன்று தயாரித்து அதனை கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை கடலில் 50 அடி ஆழத்தில் கொண்டு சென்று தேசியக்கொடியுடன் மிதக்க விட்டார். அவருடன் ஜான், நிஷ்விக், கீர்த்தனா, தாரகை, ஆராதனா உள்ளிட்ட சிறுவர்கள் இணைந்து இதனை கொண்டாடினர்.