சென்னை: தஞ்சாவூர் வட்டார தடய அறிவியல் ஆய்வகத்தில்ரூ.5.21 கோடியில் புதிதாக ஆயப் பிரிவு உருவாக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப் பேரவையில் நேற்று காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆகிய துறைகள் மீதான விவாதத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசியதாவது: தஞ்சாவூர் வட்டார தடய அறிவியல் ஆய்வகத்தில்ரூ.5.21 கோடியில் புதிதாக ஆயப் பிரிவு உருவாக்கப்படும்.
சென்னை தடய அறிவியல் துறையில் முதன்மை ஆய்வகத்தில் உள்ள நஞ்சியல் பிரிவிற்கென தானியங்கி பயோ-சிப் அரே அனலைசர்ரூ.1.02 கோடி செலவில் வழங்கப்படும். தடய அறிவியல் துறையின் சென்னை முதன்மை ஆய்வகத்திற்கு மூன்றும், திருநெல்வேலி, ராமநாதபுரம், மதுரை, தஞ்சாவூர், தர்மபுரி மற்றும் திருச்சிராப்பள்ளியில் உள்ள 6 வட்டார தடய அறிவியல் ஆய்வகங்களுக்கு தலா ஒன்று வீதம் ஒன்பது மேம்பட்ட அதிநவீன உயிர் மாதிரி சேமிப்பு வசதிகள்ரூ.2.88 கோடி செலவில் வழங்கப்படும்.
சென்னை தடய அறிவியல் துறை மற்றும் 7 வட்டார தடய அறிவியல் ஆய்வகங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்புகள்ரூ.90 லட்சம் செலவில் நிறுவப்படும். தடய அறிவியல் துறையின் ஒட்டுமொத்த நிர்வாக பணிகளை மேம்படுத்த, ஒரு முதன்மை நிர்வாக அலுவலர் பணியிடம் மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் உருவாக்கப்படும்.