திருமலை ஜூன் 30: திருப்பதி மலைப்பாதையில் 7 யானைகள் நடமாட்டத்தால் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் வாகனங்கள் சுமார் 2 கி.மீ. தூரம் அணிவகுத்து நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருமலையில் இருந்து திருப்பதிக்கு செல்லும் முதலாவது மலைப்பாதையில் நேற்றுமுன்தினம் ஏராளமான வாகனங்கள் வந்தது. அப்போது சாலையையொட்டி 7 யானைகள் சாலையோரம் சென்றது. யானைகள் கூட்டம் சாலையை நெருங்கி அங்குள்ள மரங்களை முறித்தபடி பிளீறியது. இதனை கண்டு பக்தர்கள் பீதியடைந்தனர். இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுமோ? என்ற அச்சத்தில் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினர்.
தொடர்ந்து 2 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் நிறுத்தப்பட்டன.தகவலறிந்த தேவஸ்தான வனத்துறை மற்றும் விஜிலென்ஸ் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து யானைகள் கூட்டத்தை மேளம் அடித்து, சத்தம் போட்டு விரட்டினர். இதனால் சுமார் 20 நிமிடங்களுக்கு பின்னர் யானைகள் வனப்பகுதிக்குள் சென்றது. பின்னர் மீண்டும் யானைகள் கூட்டம் இரவு 9 மணிக்கு வந்தது. இதையடுத்து தேவஸ்தான அதிகாரிகள், வழியில் வாகனங்களை நிறுத்திவிட்டனர். சிறிதுநேரத்தில் யானைகள் அந்த இடத்தை விட்டுச்சென்றதும் மீண்டும் வாகனங்களை மலைப்பாதையில் செல்ல அனுமதித்தனர்.