பேரவையில் கேள்வி நேரத்தின் போது மணப்பாறை ப.அப்துல் சமது (மமக) பேசுகையில், மணப்பாறை நகரத்தில் கனரக வாகனங்கள் அதிகமாக வருகிற காரணத்தினால், போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது. கனரக வாகனங்களை புறவழிச் சாலைகள் வழியாக செல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதற்காக, புறவழிச் சாலை அமைக்க வேண்டும் என்றார். இதற்கு பதில் அளித்து பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில், திமுக அரசு பொறுப்பேற்ற உடனே முதல்வர் மு.க.ஸ்டாலின், எங்கள் துறைக்கு அளித்த முதல் ஆணை, தமிழ்நாட்டில் நகர்ப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது.
இதனால் அந்த நகர்ப் பகுதிகளை கணக்கெடுத்து புறவழிச் சாலை அமைக்க வேண்டும் என்பதுதான். அந்த வகையில்தான் இந்த ஆட்சிப் பொறுப்பேற்றதும் பல்வேறு நகரங்களுக்கு புறவழிச் சாலைகள் போடப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு 4 நகரங்களுக்கு புறவழிச் சாலைகள் அமைக்கப்பட்டன. இந்த ஆண்டில் 4 நகரங்களுக்கு புறவழிச் சாலை அமைக்கின்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து உறுப்பினர் கோரிய மணப்பாறை புறவழிச் சாலை என்பது கட்டாயம் அமைக்க வேண்டிய சாலையாக இருக்கிறது. அது வருங்காலங்களில் அரசின் நிதிநிலைமைக்கேற்ப கட்டாயம் அமைத்துத் தரப்படும் என்றார்.