சென்னை: பெண் காவலர்களை இழிவாக பேசியதாக கடந்த மே மாதம் 4ம் தேதி தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த யூடியூபர் சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சவுக்கு சங்கர் மீது கடந்த மே மாதம் 12ம் தேதி குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டார். இந்நிலையில் சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்பு சட்டம் தொடர்பாக சென்னையில் உள்ள அறிவுரைக் கழகம் விசாரணை நடத்தியது.
அப்போது சவுக்கு சங்கரால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுவதால் குண்டர் சட்டத்தில் அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான அதிகாரம் அரசுக்கு உள்ளது. இது காவல் துறையின் பழிவாங்கும் நடவடிக்கை இல்லை என்று காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து யூடியூபர் சங்கர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது சரியான நடவடிக்கை என்று சென்னை அறிவுரைக் கழகம் உறுதிபடுத்தியுள்ளது. அதை உள்துறைச் செயலாளர் அமுதா, உத்தரவாக வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.