புதுக்கோட்டை: செல்போனை திருடியதாக கூறியதால் ஆத்திரத்தில் அண்ணனை கொன்று எரித்த தம்பி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ஒடப்பவிடுதி காட்டாற்று பாலம் அருகே கடந்த 9ம் தேதி பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்தது. விசாரணையில் அவர், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா கரிக்காடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த முல்லைவேந்தன் (23) என தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் முல்லைவேந்தன் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். இதில், முல்லைவேந்தனின் தம்பி முகிலன்(21) முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை நேற்று முன்தினம் காவல் நிலையம் அழைத்து வந்த தீவிர விசாரணை நடத்தியதில் முகிலன், தனது நண்பர்களான அதே கிராமத்தை சேர்ந்த அனீஸ்வரன் (19) மற்றும் ஒரத்தநாடு தாலுகா பொய்யாண்டார்கோட்டையை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் 2 பேருடன் சேர்ந்து முல்லைவேந்தனை கொன்று பெட்ரோல் ஊற்றி எரித்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: முல்லைவேந்தன் தினமும் போதையில் தகராறில் ஈடுபட்டு வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன் பைக் விபத்தில் சிக்கிய முல்லைவேந்தன் மனநிலை பாதிக்கப்பட்டது போல் இருந்ததுடன் வீட்டில் அனைவரிடமும் தகராறில் ஈடுபட்டு வந்தார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அவரது செல்போன் மாயமானது. அதை தம்பி முகிலன் தான் திருடியதாக கூறி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்து கடந்த 7ம் தேதி நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து முல்லைவேந்தனை அழைத்து கொண்டு ஒடப்பவிடுதி சென்றுள்ளனர்.
அங்கு அனைவரும் மது குடித்துள்ளனர். அப்போது முல்லைவேந்தனை கட்டையால் தாக்கி, கத்தியால் குத்தியதில் அவர் இறந்துள்ளார். பின்னர் டூ வீலரில் இருந்து பெட்ரோலை எடுத்து முல்லைவேந்தனை எரித்து விட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடுத்தி முகிலன், அனீஷ்வரன் ஆகியோர்கள் புதுக்கோட்டை சிறையிலும், 17வயது சிறுவன் 2 பேரை திருச்சி சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர்.