பாட்னா: பீகாரில் கொட்டும் கனமழையின் காரணமாக 10 நாளில் 4 பாலம் அடித்து செல்லப்பட்ட விவகாரம் எதிர்கட்சிகள் கடும் கண்டனத்துக்கு ஆளாகி உள்ளது. பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் மாவட்டம் பான்ஸ்பரி ஷ்ரவன் சௌக் அருகே மரியா ஆற்றின் குறிக்கே ஆற்றுப்பாலம் கட்டப்பட்டது. தற்போது பீகாரில் கனமழை பெய்து வருவதால், 13 ஆண்டுகள் பழமையான இந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பாலம் இடிந்து விழும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. பாலத்தின் கட்டுமானத்தில் தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், கடந்த ஆறு ஆண்டுகளாக பாலத்தை பராமரிக்க கோரிக்கை விடுத்து வருவதாக மக்கள் கூறினர்.
முன்னதாக கடந்த 23ம் தேதி கிழக்கு சம்பாரண் மாவட்டம் கோரசஹான் பகுதியில் சிறிய பாலம் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதேபோல், 22ம் தேதி சிவான் மாவட்டத்தில் ஒரு பாலம் இடிந்து விழுந்தது. கடந்த 18ம் தேதி அராரியா மாவட்டத்தில் ரூ. 12 கோடியில் புதிதாக கட்டப்பட்ட 180 மீட்டர் நீளமுள்ள பாலம் இடிந்து விழுந்தது. மாநிலத்தில் அடிக்கடி நடக்கும் பாலங்கள் இடிந்து விழும் சம்பவங்கள், எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளன. கடந்த 10 நாட்களில் 4 பாலங்கள் இடிந்து விழுந்தது குறித்து நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.