மும்பை: மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவை,மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் திடீரென சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் இன்னும் 4 மாதங்களில் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. பேரவையின் குளிர்கால கூட்டத்தில் பங்கேற்பதற்காக சிவசேனா(உத்தவ்) தலைவர் உத்தவ் தாக்கரே வந்தார். மாடிக்கு செல்வதற்காக லிப்ட் அருகே நின்றிருந்தார்.
அந்த நேரத்தில் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்சும் உத்தவ் தாக்கரேவும் தற்செயலாக சந்தித்துக் கொண்டனர். இரு தலைவர்களும் பேசி கொண்டே லிப்டில் ஏறிச் சென்றது மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி உத்தவிடம் கேட்டதற்கு, ‘‘இது எதிர்பாராத சந்திப்பு. நீங்கள் நினைத்ததை போல எதுவும் நடக்காது. லிப்ட்டுக்கு காதுகள் இல்லை. எனவே லிப்ட்டுகளில் இது போன்ற சந்திப்புகளை நடத்துவது நல்லதாக இருக்கும்’’ என்றார்.