சென்னை: தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) அமைப்பின் மாநில உயர்நிலை குழு கூட்டம் சென்னையில் நடந்தது. தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் இரா.தாஸ் தலைமை தாங்கினார். டிட்டோஜாக் அமைப்பில் இணைந்துள்ள அனைத்து இயக்க நிர்வாகிகள் கலந்து ெகாண்டனர். பின்னர் தீர்மானங்கள் குறித்து இரா.தாஸ் கூறியதாவது: தொடக்க கல்வித்துறையில் பதவி உயர்வு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு வர உள்ள நிலையில், கவுன்சலிங்கை நிறுத்தி வைக்க வேண்டும்.
இதனையும் மீறி கவுன்சலிங்கை நடத்தினால் டிட்டோஜாக் அமைப்பு கடந்த மே 15ம் தேதி நடத்திய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி தொடர் போராட்டங்களை மேற்கொள்ளும். அதன்படி வரும் 28ம் தேதி (நாளை), மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் ஆர்ப்பாட்டம், 29ம் தேதி ஆசிரியர்கள் சந்திப்பு இயக்கம், ஜூலை 3ம் தேதி கவுன்சலிங் நடக்கும் மையங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும். ஜூலை 4ம் தேதி டிட்டோஜாக் உயர்நிலைக் குழு கூடி அடுத்தகட்ட தொடர் போராட்டத்தை நடத்துவது தொடர்பாக முடிவெடுத்து அறிவிக்கும். இவ்வாறு இரா.தாஸ் தெரிவித்தார்.