டெல்லி: நாடாளுமன்றத்தில் அவசர நிலை பற்றி விமர்சித்து ஓம் பிர்லா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியதற்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சபாநாயகராக பதவியேற்ற பிறகு ஓம் பிர்லா பேசுகையில், முன்னாள் பிரதமர் இந்திரா அவசர நிலையை அமல்படுத்தியது, அரசியல் சாசனம் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் எனக்கூறினார். இதற்கு மக்களவையில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து பேசினார். அப்போது நாடாளுமன்றத்தில் அவசர நிலை பற்றி விமர்சித்து தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியதற்கு அதிருப்தி தெரிவித்த ராகுல் அதனை தவிர்த்திருக்க வேண்டும் எனக் கூறினார். ராகுல் காந்தியுடன் எம்.பி.க்கள் கனிமொழி, சுப்ரியா சுலே, டிம்பிள் யாதவ், பிரேமச்சந்திரன் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். சபாநாயகராக பொறுப்பேற்ற முதல்நாளிலேயே அரசியல் ரீதியான தீர்மானத்தை கொண்டுவந்தது அதிர்ச்சியளிப்பதாக காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.
சபாநாயகரின் செயலுக்கு காங்கிரஸ் கடும் அதிருப்தி
நாடாளுமன்ற வரலாற்றில் சபாநாயகரே அரசியல் தீர்மானத்தை கொண்டு வந்தது இதுவரை முதன்முறை என்றும் காங்கிரஸ் அதிருப்தி தெரிவித்துள்ளது. சபாநாயகர் தமது முதல் பணியாக அரசியல் தீர்மானத்தை கொண்டு வந்தது விபரீதமான செயல் என்றும் பிர்லாவுக்கு காங்கிரஸ் கடிதம் அனுப்பியுள்ளது. அரசியல் தீர்மானம் கொண்டு வந்ததை ஓம் பிர்லா தவிர்த்திருக்க வேண்டும் என்றும், சபாநாயகரே அரசியல் தீர்மானத்தை கொண்டு வந்திருப்பது மக்களவையில் முக்கிய பதவியின் நம்பகத்தன்மையை பாதிக்கும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.