சேலம்: கேரளாவில் இருந்து சேலம் வழியாக புதுச்சேரிக்கு கடத்தி செல்லப்பட்ட ஒன்றரை டன் சந்தன கட்டையை, சேலம் வனத்துறை அதிகாரிகள் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பறிமுதல் செய்தனர். அதனை கடத்தி வந்த கேரளாவை சேர்ந்த முகமது மிசைல் (27), முகமது அப்ரார் (26), பஜாஸ் (35), உம்மர் (43) , முகமது பசிலு ரகுமான் உள்பட 6 பேரை கைது செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், புதுச்சேரிக்கு சென்ற வனத்துறையினர் அங்கிருந்த ஆலையில் இருந்த 7 டன் சந்தனக்கட்டைகள், சந்தனத்தூள் மூட்டைகள், 20 லிட்டர் சந்தன எண்ணெய் ஆகியவற்றை பறிமுதல் செய்து, சேலம் கொண்டு வந்தனர். சந்தன கட்டைகள் கேரளாவில் இருந்து கடத்தி வரப்பட்டதால், கேரள வனத்துறை அதிகாரிகள் சேலம் வந்து விசாரணை நடத்தியதுடன், 6 பேரையும் 5 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த அழைத்து சென்றனர். நேற்றுடன் விசாரணை முடிந்த நிலையில், நேற்று மாலை 6 பேரையும், மஞ்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இன்று (27ம் தேதி) சேலம் மத்திய சிறையில் அடைக்க அவர்களை கொண்டு வருகின்றனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் புதிய தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.
அதே நேரத்தில் புதுச்சேரிக்கு சென்றும், கேரள வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளனர். கைதான 6 பேரும் ஜாமீன் கேட்டு, சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை, நேற்று நீதிபதி சுமதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 6 பேரின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.