சென்னை: திருமணமான பெண்களுக்கு பணி வழங்கப்படுவதில்லை என்ற புகாருக்கு ஃபாக்ஸ்கான் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனத் தொழிற்சாலையில் திருமணமான பெண்களை பணியமர்த்த மறுப்புதாக செய்தி வெளியானது. இது குறித்து விளக்கம் அளிக்கக் கோரி தமிழக அரசுக்கு ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், ஃபாக்ஸ்கான் நிறுவனம் இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசுக்கு விளக்கம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில், நிறுவனத்தில் புதிதாக பணியமர்த்தப்பட்டவர்களில் 25% பேர் திருமணமான பெண்கள். மொத்தப் பெண் பணியாளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் திருமணமானவர்கள் என்பதே இதன் அர்த்தம். அதுமட்டுமில்லாமல், நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 70% பெண்களே. 30% மட்டுமே ஆண்கள். நாட்டிலேயே பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மிகப்பெரிய தொழிற்சாலையாக தமிழகத்தில் அமைந்துள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனம் உருவெடுத்துள்ளது. திருமணமான பெண்களுக்கு பணியமர்த்தக் கூடாது என கொள்கை முடிவு ஏதும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளது.
இதேபோல், ஆலையில் பணியாற்றும் பணியாளர்கள் எந்த அடையாள சின்னங்களையும் அணிய தடை விதிக்கப்பட்டிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனம்; மதம் சார்ந்து இந்த தடை விதிக்கப்படவில்லை. இது பாதுகாப்பு காரணங்களுக்காகவே தங்கம், வெள்ளி உள்ளிட்ட உலோக ஆபரணங்களை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து மதத்தினருக்கும் இந்த தடை விதிக்கப்படுகிறது. பல நிறுவனங்களில் இதுபோன்ற நடைமுறை வழக்கத்தில் உள்ளது என்று விளக்கம் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.