டெல்லி: மோடி ஆட்சியில் நாடு முழுவதும் அரசியல் சட்டமும் ஜனநாயகமும் நொறுக்கப்படுவதாக ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் குற்றச்சாட்டியுள்ளார். 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று மாநிலங்களவையில் தொடங்கவுள்ளதால் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் மரபுப்படி குடியரசுத் தலைவர் உரையாற்றினார். இந்நிலையில், குடியரசுத் தலைவரின் உரை என்பது ஒன்றிய அரசு எழுதிக் கொடுத்ததுதான் என்பதால் அவரின் உரையை புறக்கணிப்பதாக ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங் இன்று காலை அறிவித்திருந்தார். தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் பாதாகைகளுடன் ஆம் ஆத்மி எம்பிக்கள் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பாக ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கூறியதாவது; ஆட்சியில் நாடு முழுவதும் அரசியல் சட்டமும் ஜனநாயகமும் நொறுக்கப்படுவதாக அவர் குற்றச்சாட்டியுள்ளார். அரசு எழுதிக் கொடுத்து ஜனாதிபதி ஆற்றும் உரையில் ஜனநாயகம், அரசியல் சட்டம் பற்றி பெரிதாக பேசுவார்கள். எனினும் உண்மையில் நாட்டில் ஜனநாயகமும், அரசியல் சட்டமும் சிதைக்கப்படுவதாக ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தால் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கப்பட இருந்த நிலையில் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார். மோடியின் சர்வாதிகார ஆட்சி, விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதற்கு பெரிய எடுத்துக்காட்டு கெஜ்ரிவால் கைது. கெஜ்ரிவாலை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் ஆம் ஆத்மி கட்சி எம்பி சஞ்சய் சிங் வலியுறுத்தியுள்ளார்.