சென்னை: தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய அலுவலகம் என்.வி.என்.மாளிகை வளாகத்தை “பசுமை வளாகமாக” மாற்றும் நோக்கத்திலும், கூட்டுறவுத்துறை சார்ந்த அலுவல் கூட்டம் நடைபெறும்போது மாநிலம் முழுவதும் உள்ள துறை அலுவலர்கள் பங்கேற்கும் வகையிலும், அதன் 4ஆவது தளத்தில் 4000 சதுர அடியில் 200 இருக்கைகளுடன் குளிர்சாதன வசதியுடன் கூடிய “கலைஞர் நூற்றாண்டு நினைவரங்கம் – ”வானவில்” கூட்டரங்கம் சுமார் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கூட்ட அரங்கின் மேற்கூரையில் 78 கிலோவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் சூரிய ஒளித் தகடுகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அலுவலக கட்டடம் முழுவதற்கும் சூரியஒளி மின்சக்தி பயன்படுத்தப்படவுள்ளது. இதன் வாயிலாக ஒரு நாளைக்கு 312 யூனிட் மின்சாரம் என்ற அடிப்படையில் ஒரு மாதத்திற்கு 9,300 யூனிட் மின்சாரம் கிடைக்கும். வர்த்தக மதிப்பில் ஒரு யூனிட் ரூ.8.70 வீதம் சுமார் ரூ.80,000/- வரை சேமிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கோபால், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சுப்பையன், கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) விஜயராணி, தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூடுதல் பதிவாளர்/மேலாண்மை இயக்குநர் சுப்ரமணியன் மற்றும் கூட்டுறவுத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.