கடலூர்: கடலூர் மாவட்டம் புவனகிரி பெருமாத்தூர் பாலு நகரில் கணவருடன் தனியாக வசித்து வந்த இளம் பெண் தூக்கிட்டு இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புவனகிரி அருகே உள்ள வண்டுராயன்பட்டு பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவருக்கும் சின்னசேலத்தை சேர்ந்த சூர்யா என்பவருக்கும் கடந்த 17/09/2023 அன்று திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணம் ஆகி சில மாதங்களில் புவனகிரியில் உள்ள பெருமாத்தூர் பாலு நகர் பகுதியில் இருவரும் தனியாக வாடகை வீட்டுக்கு குடி பெயர்ந்துள்ளனர்.
கணவர் செல்வகுமார் சிதம்பரம் பெரியார் டெப்போவில் நடத்துனராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் இவர்களுக்கு திருமணம் ஆகி பத்து மாதங்கள் கடந்தும் குழந்தை பாக்கியம் இல்லாத காரணத்தினாலும் தினந்தோறும் மது குடித்துவிட்டு செல்வகுமார் தனது திருமணத்திற்கு ஏற்பட்ட கடனை அடைக்க தனது மனைவியிடம் ரூபாய் 5 லட்சம் பணம் கேட்டு தொந்தரவு தந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இதனால் மணமுடைந்த சூர்யா, வீட்டு பெட்ரூம் ஜன்னலில் துப்பட்டாவினால் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்ததாக கூறப்படுகிறது. சூர்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இறந்த சூர்யா தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு சிதம்பரம் ஆர்டிஓ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.