டெல்லி : 50 ஆண்டுகளுக்கு முன்பு 1975ல் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலையின் போது அரசியல் அமைப்பு சட்டம் நசுக்கப்பட்டதாக பிரதமர் மோடி விமர்சனம் செய்த நிலையில், அவசர நிலை பிறப்பிக்காமலேயே பாஜக தற்போது அரசியல் அமைப்பை நசுக்கி வருவதாக காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை கூட்டத் தொடருக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, 3ம் முறையாக பணியாற்ற மக்கள் வாய்ப்பு அளித்துள்ளதால் தங்களது பொறுப்பும் 3 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். இந்த ஆண்டு ஜூன் 25ம் தேதியுடன் காங்கிரஸ் கட்சி அவசர பிரகடனம் செய்து 50 ஆண்டுகள் நிறைவடைவதாக குறிப்பிட்ட மோடி, இது ஜனநாயகத்தின் மீது கரை 50 ஆண்டுகளை குறிப்பதாக விமர்சித்தார்.
பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சியில் மக்களால் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட 10 ஆண்டுகால அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை மறந்துவிட்டு 50 ஆண்டுக்கு முந்தைய எமர்ஜென்சியை பிரதமர் மோடி நினைவூட்டுவதாக அவர் பதிலடி கொடுத்துள்ளார். மக்கள் இம்முறை மோடிக்கு எதிராக வாக்களித்துள்ள போதும் அவர் பிரதமராக ஆகிவிட்டதாக கூறியுள்ள கார்கே, மோடி இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மக்களுக்கு தேவை ஆக்கப்பூர்வமான திட்டங்களே தவிர பிரதமர் வெற்று முழக்கங்கள் அல்ல என்றும் கார்கே குறிப்பிட்டுள்ளார்.