அரியலூர், ஜூன் 24: அரியலூர் வட்டத்திற்கான வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நிகழ்ச்சியில் பெறப்பட்ட மனுக்களில் தகுதியுடைய நபர்களுக்கு பட்டாமாறுதல், உட்பிரிவு ஆணைகளை மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி வழங்கினார். அரியலூர் மாவட்டத்தில் 1433ம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி மாவட்டம் முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அரியலூர் வட்டத்திற்கான இரண்டாம் நாள் ஜமாபந்தி வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி தலைமையில் நடைபெற்றது.
இதில், வருவாய் தீர்வாயத்தில் முதல் நாளில் அரியலூர் தெற்கு , அரியலூர் வடக்கு, ராயபுரம் வாலாஜா நகரம் உட்பட 18 கிராம பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 419 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மேலும், அரியலூர் உள்வட்டத்திற்கான வருவாய் தீர்வாயத்தில் பெறப்பட்ட மனுக்கள் உள்பட பெறப்பட்ட மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுடைய நபர்களுக்கு பட்டாமாறுதல், உட்பிரிவு ஆணைகளையும் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், வட்டாட்சியர் ஆனந்தவேல், துணை வட்டாட்சியர்கள், நில அளவை அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.