நாகர்கோவில்: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் நாகர்கோவிலில் இன்று நிருபர்களிடம் கூறியது: நீட் மற்றும் நெட் நுழைவு தேர்வுகளில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. வினாத்தாள் வெளியாகி விற்பனை ஆனது. இதனால் ஒன்றிய அரசு பல்வேறு நெருக்கடிக்கு ஆளாகி உள்ளது. தோ்வு முதன்மை தலைவர் மாற்றப்பட்டு இருக்கிறார். இந்த மாற்றத்தால் தீர்வு ஏற்படாது. எனவே கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் நல்ல உறவு உள்ளது. மோடி 3வது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளார். எனவே கடந்த கால தவறை சரிசெய்து கச்சத்தீவை மீட்டு இந்தியாவுடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில்வே திட்டங்களிலும் தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது. தமிழகத்தை எல்லா வகையிலும் புறக்கணிக்கப்பதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியபடி 500 மதுக்கடைகள் குறைக்கப்பட்டுள்ளன. அப்படி குறைக்கப்பட்ட கடைகளில் கள்ளக்குறிச்சி கடையும் ஒன்று. இதை தான் வாய்ப்பாக சாராய விற்பனையாளர்கள் பயன்படுத்தி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.