திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட வேளாண்மை விற்பனை (ம) வேளாண்மை வணிகத்துறை சார்பில், தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீன மயமாக்கம் திட்டம், நிலை 3ன் கீழ், கும்மிடிப்பூண்டி உபநில பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் மூலம் கும்மிடிப்பூண்டி உழவர் உற்பத்தியாளர் நிறுவன ஊறுப்பினர்களுக்கு தொழில் முனைவோருக்கான வசதி குறித்த பணிமணை கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் வேளாண் வணிக துணை இயக்குநர் நா.ஜீவராணி தலைமை வகித்தார். பொன்னேரி வேளாண் வணிக அலுவலர் எஸ்.அமுதா வரவேற்றார். வேளாண்மை இணை இயக்குநர் கா.முருகன், வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.தேவி, தோட்டக்கலை உதவி இயக்குநர் ம.பிரதீப்குமார் கலந்துகொண்டு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்ந்த திட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினர்.
இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் மூலம் வேளாண் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் வேளாண் மற்றும் உணவுப் பதப்படுத்தும் தொழில் தொடங்க ஆர்வமாக உள்ள வேளாண் பட்டதாரிகள், வணிகர்கள், உணவு நிறுவனங்களின் உரிமையாளர்கள், பட்டம், டிப்ளமோ, ஐடிஐ அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் தொழில் பயிற்சி பெற்றவர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவன உறுப்பினர்கள் பயன்பெற முடியும். முன்னதாக இதற்கான ஏற்பாடுகளை தேசிய வேளாண் நிறுவன குழு தலைவர் நேதாஜி, உதவி வேளாண்மை அலுவலர்கள் இளங்கோ, ஏழுமலை, பாஸ்கர், சுஜிதாமேரி, முதன்மை செயல் அலுவலர்கள் அருண்பிரசாத், தயாமதி ஆகியோர் செய்திருந்தனர்.