சாத்தான்குளம், ஜூன் 23: சாத்தான்குளம் அருகே பெரியதாழை சிறுமலர் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு துவக்க விழா, 12 மரக்கன்றுகள் நடும்விழா, புதிய வகுப்பறைகள் மற்றும் சத்துணவுக்கூடம் திறப்பு விழா என முப்பெரும் விழா நடந்தது. முன்னதாக புதிய பள்ளி கட்டிடத்தின் மேடையில் பங்குத்தந்தையும், உதவி பங்குத்தந்தையும் இணைந்து சிறப்பு திருப்பலி நடத்தினர். தொடர்ந்து நடந்த முப்பெரும் விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி தலைமை வகித்தார். தெரு கமிட்டி தலைவர்கள், நிதி குழுவினர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தாளாளர் தந்தை சுசிலன் வரவேற்றார்.
இதைத் தொடர்ந்து புதிய கட்டிடத்தில் முன்பாக 12 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதைத்தொடர்ந்து இரு புதிய வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் சத்துணவுக்கூடம் ஆகியவற்றை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, தாளாளர் தந்தை சுசிலன் ஆகியோர் திறந்து வைத்தனர். இதையொட்டி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர், ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். தலைமை ஆசிரியை மேரி திலகவதி நன்றி கூறினார்.