கலவை : கலவை அரசு பள்ளி மாணவர்களுக்கு குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கலவை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் குழந்தை தொழிலாளர் தடுப்பு மற்றும் பாலியல் துன்புறுத்தல் குறித்த விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில் கலவை சப்-இன்ஸ்பெக்டர்கள் சூர்யா, பூஜா ஆகியோர் கலந்துகொண்டு பாலியல் துன்புறுத்தல் மற்றும் குழந்தை திருமண தடுப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் தங்கள் பகுதிகளில் உள்ள கடைகளில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் அருகில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.
ஒவ்வொரு மாணவரும் தங்கள் கிராமத்தை போதைபொருட்கள் விற்பனை இல்லாத கிராமமாக உருவாக்க ஒருங்கிணைய வேண்டும். குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோருக்கு போதை பழக்கத்தால் ஏற்படும் தீமை குறித்து ஒவ்வொரு மாணவரும் விளக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
மேலும் பெண்கள் பாதுகாப்புக்கான அவசர உதவி எண் 181, குழந்தைகளுக்கான பாதுகாப்பான எண் 1098 குறித்தும் விளக்கினர். தொடர்ந்து, போதை ஒழிப்பு, பெண்கள் பாதுகாப்பு குறித்து துண்டுபிரசுரங்கள் வழங்கினர். பின்னர் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.