திருமங்கலம், ஜூன் 21: திருமங்கலம் நகராட்சி குப்பை கிடங்கில் இருந்து 7 டன் மக்காத பிளாஸ்டிக் கழிவு பொருட்கள், தனியார் சிமென்ட் ஆலையின் எரிபொருளாக நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. திருமங்கலம் நகரில் 27 வார்டுகள் உள்ளன. இவற்றில் தினசரி நகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலமாக வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் குப்பை கழிவுகளை பேட்டரி வாகனங்கள் மூலமாக எடுத்துவரப்படுகின்றன. இந்த கழிவுகள் விருதுநகர் ரோடு, தெற்குத்தெரு, உசிலம்பட்டி ரோடு பகுதிகளில் உள்ள நகராட்சி நுண்ணுர கூடங்களில் தரம் பிரிக்கப்படுகிறது. இவற்றில் மக்கும் கழிவுகள் இயற்கை உரமாக மாற்றப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. மக்காத பிளாஸ்டிக் குப்பைகள் தனியாக பிரித்து வைக்கப்பட்டு சிமென்ட் ஆலைக்கு எரிபொருளாக அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இந்த மாதம் திருமங்கலம் நகராட்சியில் சுமார் 7.08 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேர்ந்தன. இவை நேற்று லாரி மூலமாக அரியலூரில் உள்ள சிமென்ட் ஆலைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், ஆணையாளர் அசோக்குமார், பொறியாளர் ரத்தினகுமார், சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர் முன்னிலையில் இந்த பிளாஸ்டிக் கழிவுகள் அனுப்பப்பட்டன.